மலையாளத் திரைப்படங்கள் இந்திய சினிமா ரசிகர்களிடையே இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தனிக் கவனம் பெற்று வருகின்றன. பிரமயுகம், மஞ்ஞும்மல் பாய்ஸ், அன்வெஷிப்பின் கண்டேதும், பிரேமலு போன்ற மலையாள திரைப்படங்களைத் தொடர்ந்து இன்று தமிழகத்தில் வெளியாகியுள்ளது ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம்.
மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், மலையாள எழுத்தாளர் பென்யாமின் (பென்னி டேனியல்) எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் முகம்மது. வெளிநாடு சென்று வேலை பார்த்தால், தனது குடும்பத்தின் கஷ்டங்கள் தீரும் என நம்பி சௌதி அரேபியாவிற்கு செல்லும் இவருக்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலை வழங்கப்படுகிறது.
உணவு, நீர், ஓய்வு இல்லாமல் பல்வேறு கொடுமைகளுக்கு இடையே பாலைவனத்தில் துன்புறும் இவர் எவ்வாறு தப்பித்து தாயகம் திரும்பினார் என்பதே ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் பிரித்விராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு- ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ஒலிக்கலவைப் பணியை ரசூல் பூக்குட்டி செய்துள்ளார்.