டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்ததற்கு அந்நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இந்த முறை கேஜ்ரிவால் பிரச்சினை மட்டுமல்லாது காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்தும் கருத்து தெரிவித்து இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் அளித்த பேட்டியில், “டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது, தூதரக அதிகாரி குளோரியா பெர்பேனாவுக்கு சம்மன் உள்பட பல நடவடிக்கைகளையும் நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் அக்கட்சி தேர்தலில் முழுவீச்சில் பிரச்சாரம் செய்வது தடைபடும் சூழல் உருவாகியுள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நியாயமான, வெளிப்படையான, காலதாமதமின்றி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்,