இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகின்றது.
இந்நிலையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அடுத்துவரும் நாட்களில் புதிய தடைகளை விதிக்ககூடும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.
எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அடுத்து, ஜி-7 உறுப்பு நாடுகள், கூட்டணியினர் மற்றும் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து ஜனாதிபதி பைடன், விரிவான ஆலோசனையை மேற்கொண்டார்.
இதன்படி, வருகிற நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்ககூடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.