சேர சோழ பாண்டிய தமிழ்ப் பேரரசுகள் ஒவ்வொன்றாக பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தன. மூவேந்தர்கள் மட்டுமன்றி பல்லவ மன்னர்களுக்கும் தமிழ் வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இந்த மூவருக்கும் முன்னரே அவர்களின் ஆட்சியும் தமிழகத்தில் முடிவுக்கு வந்திருந்தாலும் அவர்களின் வழித் தோன்றல்கள் என்று சொல்லப்பட்ட சம்புவராயர்கள் மீண்டும் அரியணை ஏறினார்கள்.
பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய அவர்களுடைய ஆட்சி பதினான்காம் நூற்றாண்டின் இறுதி வரை நிலைபெற்றிருந்தது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள்.
படைவீட்டின் புவியியல் அமைப்பு
சம்புவராயர்கள் ஆரணியை அடுத்த படைவீட்டை தலைநகராகக் கொண்டு தொண்ட மண்டலத்தை ஆண்டனர். அவர்களின் ஆட்சி எல்லை பரப்பு வடபெண்ணை முதல் காவிரி வரை பரந்து விரிந்திருந்தது. அவர்கள் வீரசம்புவர் குளிகை என்ற நாணயத்தைப் வெளியிட்டு பயன்படுத்தினர். அவர்கள் கொடியில் காளை இடம்பெற்றிருந்தது. படைவீடு, விரிஞ்சிபுரம் என இரண்டு இடங்களில் அவர்களின் தலை நகரங்கள் செயல்பட்டன. படைவீடு நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை அரண்களால் ஆனது. விரிஞ்சிபுரம் கோட்டை பாலாற்றங்கரையில் அமைந்திருந்தது.
படைவீட்டுக்கு செல்ல இரண்டு வாசல்கள் உண்டு. ஒன்று சந்தவாசல். இன்னொன்று வழியூர் வாசல். இரண்டும் அந்த மலை சூழ் பகுதிக்குள் செல்வதற்கான கணவாய் போன்றவை. இவற்றைக் கடந்துதான் படைவீடு கோட்டையை அடைய முடியும். படைவீட்டின் வீரர்களைக் கடந்து கோட்டையை அடைவது அவ்வளவு எளிதாக இருந்திருக்க முடியாது என்பதை இப்போதும் உணர முடிகிறது.
படைவீட்டில் இரண்டு கோட்டை அடித்தளங்கள் இப்போதும் காண முடிகிறது. ஒன்று சுமார் ஆயிரம் மீட்டர் நீள அகலம் உடையது. மற்றது அதில் பாதி அளவு. பெரிய கோட்டையில் மன்னரும் சிறிய கோட்டையில் அமைச்சர், தளபதி, அகம்படையார்கள், நிர்வாகிகள் இருந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது. படைவீட்டுப் பகுதியில் பல இடங்களில் இப்போது பெரிய பெரிய தூண்களும் சிற்பங்களும் உத்தரங்களும் சாலை ஓரங்களிலும் விவசாய நிலங்களின் நடுவேயும் கிடப்பதைப் பார்க்க முடிகிறது. இது தவிர ராஜகம்பீரன் மலையின் மீதும் ஒரு கோட்டை இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றன.
அதை எளிதில் அடைய முடியாது. இப்போதும் அதுதான் நிலை. நெட்டுக்குத்தான மலை. மலையின் உச்சியில் சுரங்கம் வழியாகவே சென்றுதான் கோட்டையை அடைய முடியும்படி அந்தக் கோட்டை அரண் அமைக்கப்பட்டிருக்கிறது. மலையின் உச்சியில் பெரிய சுனையும் தானியங்கள் கொட்டி வைப்பதற்கான கலயம் ஒன்றின் சிதலமும் மலையில் இருந்து கண்காணிக்க காவல் கோட்டங்களும் இருக்கின்றன. எட்டு நூறு ஆண்டுகளின் மிச்சமாக அவை இப்போதும் கம்பீரமாக விளங்குகின்றன.