கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக இருந்த சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லே அவுட்டில் வசித்து வந்த அவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் காலை 9.40 மணிக்கே இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது.
அப்போது உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்து சில மணி நேரம் ஆகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சௌந்தர் ஜெகதீஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
எனினும் சமீப காலமாகவே அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக அவர் மருந்துகளை எடுத்து வந்ததாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சௌந்தர்ய ஜெகதீஷ்க்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபத்தில் தனது மகளுக்கு அவர் திருமணம் செய்து வைத்துள்ளார். தொழிலதிபராக இருந்த ஜெகதீஷ் கன்னடத்தில் பப்பு, மஸ்த் மஜா மதி, சிநேகிதிரு, ராம்லீலா உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார்.
ராஜாஜிநகரில் அமைந்துள்ள ரெஸ்டோபார் நிறுவனம் ஜெகதீஷுக்கு சொந்தமானது, இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் பெரும் சர்ச்சையில் சிக்கியது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் மதுக்கடை திறந்திருந்ததால் ஜெகதீஷ் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தர்ஷன் நடித்த காட்டேரா படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒரு பார்ட்டி நடந்ததாகவும், இதற்காக நள்ளிரவு வரை மதுக்கடை திறந்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் இந்த தற்கொலை சம்பவம் கன்னட திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.