வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து வழக்குத் தொடர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்படும் பஸ் சாரதிகளுக்கு ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும், அதற்கான வரைவு திட்டம் போக்குவரத்து அமைச்சினால் சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுகிறனர். குறிப்பாக, வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்கள் நிறுத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இதுபோன்ற பஸ்களின் சாரதிகள் உடனடியாக கைது செய்யப்படுவதோடு, அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.