மாதவிடாய் வலியைக் குறைக்க மாத்திரை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ளார்.இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லைலா கான்(16). இவர் மாதவிடாய் வலியைக் குறைக்க நண்பர்களின் பரிந்துரைகளின் படி கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்துள்ளார். அதில் அவருக்கு வயிறு வலியோடு, தலைவலியும் வந்துள்ளது.
தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வாந்தியும் எடுத்துள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அங்கு இரைப்பை அழற்சி எனக் கூறி பரிசோதித்து அனுப்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வீடு திரும்பிய லைலாவின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. வலியில் துடித்துள்ளார். நடக்க கூட இயலாமல் குளியலறையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரது தாயும், உறவினர்களும் அவரை காரில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
அங்கு சிடி ஸ்கேனில் அவருக்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அக்கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்தார். அதன்பின் அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.
அதனால் 5 பேரின் உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தகுந்த மருத்துவ ஆலோசனையை பெறாமல் பிறர் அளித்த பரிந்துரையில் மருந்துகள் உட்கொள்வதில் அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.