முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள். இதன்போது ஒரு இளைஞனைக் கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதைத் தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.
நாயாறு கடற் படையினரின் உதவியுடன் ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞன் நாயாறு கடலில் மூழ்கிய நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீட்கப்படவில்லை குறித்த நீரில் மூழ்கியவரின் சடலம் இன்று (29) கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நீரில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளனர். தந்தை மற்றும் மகன், மூன்று சகோதரர்கள் ஒன்றாக உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
குறித்த பகுதியாதனது நீராடுவதற்கு மிகவும் ஆபத்தான பகுதி என அறிவித்தல் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை விடப் பிரதேச வாசிகளும் வருபவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும் அது செவிமடுக்கப்படாமல் தொடர்ந்து உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பாலசுந்தரம் பிரதீபன் என்ற மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.