மூன்று பெண்களை கழுத்தை நெரித்து கொன்று சொத்துக்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் எல்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இத்தேபானையில் பெண்ணொருவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டதையடுத்து எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
யகிரல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு எல்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கைத்தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.