அம்பாறை – கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை(1) மதியம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் மத்தியமுகாம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஏ.சி.எம் ஆபீத் என்ற திருமணமான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்தவர் மனநோய் சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.இதன் பின்னர் மரணமடைந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக காவல் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான காவல்துறை பரிசோதகருமான எம்.எல் றபீக் ஆகியோர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.