திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் படகுகளுடன் ஈடுபட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மாநில நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து நன்றி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவர்களை மீட்பதற்காக திருநெல்வேலி மாவட்டம் உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து 72 பைபர் படகுகளுடன் 400 மீனவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கிய திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிந்து பூந்துறை, சி.என்.கிராமம், குறுக்குத் துறை, நொச்சிக்குளம், முன்னீர் பள்ளம், சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உயிரையும் துச்சமென மதித்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
வெளியேற முடியாமல் வீடுகளில் மேல்தளங்களில் தஞ்சம் அடைந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டு படகுகளில் ஏற்றி முகாம்களில் தங்க வைத்தனர். மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், துணை இயக்குநர் காசி நாத பாண்டியன், ஆய்வாளர் பால முருகன், உதவி இயக்குநர் சவுந்தர பாண்டியன் மற்றும் மீனவர் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.