வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் சம்பவம் ஒன்று விஷேட அதிரடி படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் நேற்றைய தினம் (16-05-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பறயனாளங்குளம் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு, சாளம்பன் பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் சட்டவிரோத மர கடத்தல் ஒன்றினை சுற்றி வளைப்பதற்காக சென்றுள்ளனர்.
இதேவேளை, சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்துமாறு வழி மறித்த போது குறித்த வாகனம் விஷேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை நிறுத்த வாகனத்தின் முன் சக்கரத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போது கப் ரக வாகனத்தில் இருந்த சந்தேக நபர் கப் ரக வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
பறயனாளங்குளம் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி (33529) சந்திரதிலக என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகத்தரின் காயங்கள் பாரதூரமானதாக இல்லாததால் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, கைப்பற்றப்பட்ட வாகனத்தையும் அதனுள் இருந்த சட்டவிரோதமாக ஏற்றி செல்லப்பட்ட 7 பெரிய முதிரை மரக்குற்றிகளையும் ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சந்தேக நபரிடம் பறயனாளங்குளம் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.