லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகர் விஜய் நடித்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் நாளை திரைக்கு வருகிறது.
லியோ படத்தை சட்டவிரோதமாக 1246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், லியோ திரைப்படமானது நாடு முழுவதும் 1500 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மிகுந்த பொருட்செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதால் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என வாதிடப்பட்டது.
இதையடுத்து லியோ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.