யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுந்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில் அரைக்க கொடுத்து விட்டு கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்போது புன்னாலை கட்டுவன் வடக்கை சேர்ந்த செல்வம் சிவானந்தம் ( வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார்.