மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய சட்டத்திருத்தம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடி வீட்டுமனை உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் இறந்த நிலையில், ஏழு மாதங்களுக்கு பிறகு போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து அந்த நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விவகாரம், சலபதியின் வாரிசுகளுக்கு தெரிய வந்ததையடுத்து, இதுசம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையில், போலி பத்திரப்பதிவு குறித்து புகார் வந்தால் அதை விசாரித்து, போலி என்று கண்டறிந்தால் அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய அதிகாரிக்கு உத்தரவிட மாவட்ட பதிவாளர் அதிகாரம் வழங்கி சட்டத்திருத்தம் வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்திருத்தத்தின்படி, சலபதியின் வாரிசுகள் மீண்டும் புகார் அளித்தனர்.
அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், போலி பொது அதிகார பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சலபதியின் மகன் சுதாகரராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாகவும், சட்டத் திருத்தத்துக்குப் பின் இரண்டாவது புகாரின்படி, விசாரணை நடத்தி உரிய காலத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்துக்கள் மோசடி எப்படி அபகரிக்கப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். இதுபோன்ற செயல்களை தடுக்க உயர்நீதிமன்ற யோசனைப்படி, நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய சட்டத்திருத்தம் பாராட்டத்தக்கது. மனுதாரரின் புகார் குறித்து விசாரித்து 8 வாரங்களில் மாவட்ட பதிவாளர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.