எதிர்காலத்தில் பாடசாலை சீருடை மற்றும் மதிய உணவு போன்ற கொடுப்பனவுகள் முறையாக அதிகரிக்கப்படும் எனவும், 2030 ஆம் ஆண்டளவில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மல்லாவியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விவசாயக் கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினூடாக பாடசாலைகளில் அத்தியாவசிய மனித வளங்கள் மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
2030 ஆம் ஆண்டளவில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இலவச மதிய உணவுக்கான ஏற்பாடுகளை செய்வது தொடர்பான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருவதோடு பிரான்ஸ் அரசாங்கத்துடனும் தொடர்புடைய கட்சிகளுடனும் இது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவை அனைத்திற்கும் மத்தியில், குழந்தைகளின் கல்வி தடையின்றி பேணப்பட வேண்டும் என்றும், நிலையான கல்வித் திட்டத்தைத் தொடர அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும், போர் மோதல்கள், காலநிலை மாற்றம், போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து இந்தக் கல்வி சவால்களை வெற்றிகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.