நாட்டில் மழை மற்றும் பலத்த காற்று நிலவிவரும் சீரற்ற காலநிலையால் கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையினை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
அந்த பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் 100 மில்லி மீற்றர் தாண்டிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக காணப்படுவதாகவும், ஆபத்தான கட்டத்தில் தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் இந்நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அத்துடன் நிலம் மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்படுவது, மரங்கள், வேலிகள் மற்றும் மின்கம்பங்கள் சாய்வது, திடீரென நீரூற்றுகள் தோன்றுவது, சேற்று நீர் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவை மண்சரிவுக்கான அறிகுறி என கருத்தில் கொள்ளுமாறும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.