பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சொகுசு பேருந்தில் பயணித்த ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சாரதியும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த சொகுசு பஸ்ஸுடன் இலங்கை போக்குவரத்து சபை பஸ் மோதியுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.