கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யும். சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான மற்றும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அண்மித்த கடற்பரப்புகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் கடல் அலைகளின் அதிகரிப்பு காரணமாக கடல் கொந்தளிப்பாகவும் எழுச்சியாகவும் காணப்படும்.