திருகோணமலை என்.சீ. வீதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால் பார் வேண்டாம் என தெரிவித்து நேற்று (03.03.2023)பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை என்.சீ வீதியில் உள்ள பிரபல பெரும்பான்மையின கலவன் பாடசாலைக்கு முன்பாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விடுதி ஒன்றில் மதுபானம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மக்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் பாடசாலை சமூகத்தினர் ஒன்றிணைந்து பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த விடுதிக்கு 100 மீட்டர் தூரத்தினுள் ஆலயம் மற்றும் பாடசாலை அமைந்திருக்க எவ்வாறு மதுபானசாலை திறப்பதற்கு அரச அதிகாரிகள் அனுமதிக்க முடியும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை மறைக்க முற்பட்ட போதிலும் பொலிஸார் இடம் அளிக்கவில்லை. அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.