கொழும்பில் சில பிரதேசங்களில் 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் தடைப்படுதல் மற்றும் அத்தியாவசிய உள்ளக விஸ்தரிப்பு பணிகள் காரணமாகவே நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஊடகங்களுக்கு இன்று (17.08.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையின்படி நாளை மறுதினம் 2023.08.19ஆம் திகதி (சனிக்கிழமை) மு.ப. 8 மணி முதல் மறுநாள் 2023.08.20ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணி வரையிலான 18 மணிநேர நீர் விநியோகத் தடை என கூறப்பட்டுள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவலை நகரசபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ பிரதேச சபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்த ஆகிய பிரதேசங்கள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.
நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.