கிளிநொச்சியில் பல்வைத்திய சிகிச்சைக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த சம்பவம்..!

0
42


கடந்த 13ந்திகதி செவ்வாய்க்கிழமை தனது பல்லில் ஏற்பட்ட வலிகாரணமாக கிளிநொச்சி நகரில் உள்ள பல்வைத்திய சிகிச்சை நிலையம் சென்ற யுவதிக்கு பாதிக்கப்பட்ட பல்லை அகற்றுவதற்ற்குப்பதிலாக அதனை நவீன சிகிச்சை மூலம் நிரப்பிக்குணப்படுத்தலாம் என்றும் அதற்கு ரூபா 18 ஆயிரம் செலவாகும் என்றும் வைத்தியர் கூறுகிறார்.

அதற்கு உடன்பட்டு சிகிச்சை நடைபெறுகிறது. திடீரென வைத்தியர் சிகிச்சையை நிறுத்தி “ ஒரு சின்னக் கிளிப் ஒன்று உள்ளுக்க போயிற்று. பயப்பட வேண்டாம் வீட்ட போய் வாழப்பழம் பப்பாப்பழம் நிறையச் சாப்பிடுங்க அது நளைக்கு மோசனோட வெளிய போயிரும் சனிக்கிழம வாங்க” என்று சொல்லி அனுப்புகிறார்.

வாய் முழுவதும் விறைத்த நிலையிலிருந்தமையால் என்ன நடந்ததென்று உணரமுடியாத யுவதி அவர் சொன்னது போல செய்த பின்னரும் மறுநாள் அவ்வாறு எதுவும் வெளிவந்ததாக உணராத நிலையில் அச்சமடைந்த யுவதி பல்வைத்தியரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கிறார். அவரோ அது ஒரு பெரிய விடையமே இல்லை என்றும் அது பற்றி யோசிக்கத்தேவையில்லை என்றும் ஆலோசனை கூறுகிறார்.

இப்போது யுவதிக்கு ஏதோ சந்தேகம் ஏற்படுகிறது. வைத்தியரிடம் எக்ஸ் றே எடுத்துப்பாரக்க விரும்புவதாகவும் அதற்கு கடிதம் தருமாறும் கேட்கிறார். வைத்தியர் பல சாக்குப்போக்குச் சொல்லி தவிர்க்க முயல்கிறார். யுவதி பய மிகுதியால் அவைரைப் பலமுறை வற்புறுத்தவும் வைத்தியர் அவரை ஒரு கிழமையின் பின்னர் சாவகச்சேரி வைத்திய சாலைக்குச்சென்று எக்ஸ் ரே எடுக்கும்படி கடிதம் கொடுத்து அனுப்புகிறார். அவரது சிகிச்சை நிலைய முகவரியிடாமல் பளை முகவரியிட்டு அந்த கடிதம் வழங்கப்பட்டிருக்கிறது.

யுவதி தனக்கு ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்ந்து அங்கு செல்வதைத் தவிரத்து 21ந்திகதி யாழ்ப்பாணம் வந்து பிரபல தனியார் மருத்துவமனையில் எக்ஸ் ரே எடுக்க முயன்றிருக்கிறார்.
இதற்கிடையில் நெஞ்சில் இனம்புரியாத வலி, மூச்செடுக்கும்போது இருமல் போன்ற உபாதை ஏறபட்டு அவதியுறுகிறார்.

எக்ஸ்ரே எடுத்து அவரைப் பரிசோதித்த வைத்தியர்
“ உங்கள் பிரச்சனை சிக்கலானது உடனடியாக நீங்கள் பெரியாஸ்பத்திரிக்கு போய் காட்டுங்கள். தாமதிக்க வேண்டாம்” எனக்கூறியுள்ளார். அன்றிரவே யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த யுவதியின் தந்தையிடம் சத்திர சிகிச்சை நிபுணர் திடுக்கிடும் தகவலைத் தெரவித்தார்.

உங்கள் பிள்ளையின் சுவாசக்குழாயினுள் ஒரு பல்சத்திர சிகிச்சை உபகரணம் சிக்கியுள்ளது. இது ஒரு பார தூரமான நிலமை. அதை எடுப்பது கொஞ்சம் சிக்கலாக இருக்கும். எடுக்காமலும் விடமுடியாது. ஆபத்தான இடத்தில் இருக்கிறது. நாங்கள் முயற்சி செய்கிறோம். என்று ஒரு பெரிய குண்டைத்தூக்கிப்போட்டார்.

உடைந்துபோனதந்தை செய்வதறியாது தவிக்கிறார். அதிகாலை சத்திர சிகிச்சைக்கூடத்தில் வைத்திய நிபுணர்களின் பெருமுயற்சியால் அந்தப் பொருள் அவளின் மூச்சுக்குழாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுவிட்டது!
அந்தப் பல்வைத்தியரினால் உள்ளுக்குப் போனதாக ்கூறப்பட்ட அந்தச்சின்னக்கிளிப் இதுதான்!

துளையிடும் கருவியின் 2 அங்குல நீளமான கூர்முனை கழன்று மூச்சுக்குழாயினுள் போன நிலையில் பொறுப்புணர்வோடு அந்த நபரை தானே வைத்திய சாலையில் அனுமதிக்க வைத்து உடனடிச் சிகிச்சை மூலம் அதைவெளியகற்ற நடவடிக்கை எடுக்காமல் மிக அலட்சியமாகவும் வைத்தியத்துறைக்கே அபகீர்தியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் விதமாகச் செயற்பட்ட இத்தகைய வைத்தியர்களை இனங்காணுவதற்காகவே இந்தப்பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here