கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை அடுத்த மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு பாடங்களுக்கான பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். மேலும் 6 பாடங்களுக்கான பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளதுடன், ஏனைய பாடங்களுக்கான பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10 மத்திய நிலையங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆசிரியர்களை அதற்காக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விடைத்தாள்கள் மதிப்பீட்டின் போது, செயன்முறை பரீட்சைகளுக்கு தேவையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுமென, அமித் ஜயசுந்தர தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்றதுடன், இதன் பின்னர் விடைத்தாள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகளை பெப்ரவரி 22ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த போதிலும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால் இவ்வருட உயர்தரப் பரீட்சைக்கான மதிப்பீடுகள் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.