இயக்குநரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் (84) பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். உயிரிழந்த பாண்டியனின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு பழையூர்பட்டியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். இவர் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதுகளை வென்றுள்ளார். மேலும் சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
சினிமா ஆப்பரேட்டராக பணியாற்றி வந்த இவரது தந்தை எஸ். பாண்டியன்(84) உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 16) அதிகாலை 6.30 மணியளவில் காலமானார்.
சொந்த ஊரான மதுரை மாவட்டத்தில் உள்ள பழையூர்பட்டியில் வாழ்ந்து வந்த சேரனின் தந்தை சொந்த ஊரிலேயே உயிரிழந்த நிலையில், இன்று மாலை அங்கேயே இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் சேரன் குடும்பத்தினருக்கு பல்வேறு திரைத்துறையினரை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சம்மோகள் வலைத்தளம் மூலமாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.