முல்லைத்தீவு – விசுவமடு பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் தகாத உறவு காதலனால் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து சந்தேக நபர் கடந்த (19) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவரை பிரிந்துவாழும் பாடசாலை ஆசிரியை தனித்து வாழும் நிலையில் வேறு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருடன் தகாத உறவை பேணி வந்ததுடன், இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கல்வி விடயம் தொடர்பாக ஆசிரியை வீட்டுக்குச் சென்ற போது மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது ஆசிரியை வீட்டில் இருக்கவில்லை என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரை (20) அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.