இலங்கை போக்குவரத்து சேவைக்கு கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய குறைப்பு மேற்கொண்டே அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினால், அடுத்த வருடம் மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டு கட்டணம் அதிகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு திறைசேரியால் வழங்கும் நிதி குறைப்பு செய்தே அரச ஊழியர்களின் வாழ்க்கைச்செலவை 10ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பு செய்திருக்கின்றது.
இதன் காரணமாக மாணவர்களே பாதிக்கப்படப்போகின்றனர். அத்துடன் ரயில் சேவைகள் உரிய நேரத்துக்கு இடம்பெறாமையினால், நாள் ஒன்றுக்கு 390 பயண வாரங்கள் மேற்கொள்ள வேண்டிய ரயில் போக்குவரத்து தற்போது 300 பயண வாரங்களே இடம்பெறுகின்றன.
இதன் காரணமாக காரியாலயங்களுக்கு செல்பவர்களுக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. ரயில் திணைக்களத்தில் பயிற்றப்பட்ட தொழிநுட்ப ஊழியர்கள் 6 ஆயிரம் பேருக்கு வெற்றிடம் காணப்படுகிறது.எனவே இந்த வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.